மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் வியாழக்கிழமை (29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் பனங்காட்டுக்கொட்டு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஆனந்த் கன்பூசியஸ் விஜய் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் ரோந்து வாகனம் பேசாலை வீதியில் மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு அம்புலன்ஸ் வாகனத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.