சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்கான விருதை தட்டிச் சென்றது புதுக்கோட்டை வடுகபட்டி பெண்கள் குழுமாநில அளவில் சிறந்த மகளிர் சுய உதவிக் குழு என்று தேர்வான புதுக்கோட்டை வடுகபட்டி கிராம மகளிர் குழுவிற்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாநில அளவில் சிறந்து விளங்கும் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் , விராலிமலை ஒன்றியம் வடுகப்பட்டி ஊராட்சி மகளிர் சுய உதவிக்குழு தனது சிறப்பான செயல்பாட்டால் மணிமேகலை விருதை பெற்றது.
வடுகப்பட்டி ஊராட்சியில் பல சமூக சேவைகள் செய்தமைக்காகவும், சிறந்த நிர்வாகத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காக சிறப்பாக தொழில் செய்தமைக்காக பாராட்டி வழங்கப்படுகிறது என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இந்த குழு தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளனர், அதேபோல் பல்வேறு செயல்பாடுகளில் முன்னிலையில் இருந்து வந்துள்ளனர்.
குறிப்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு, கொரோனா விழிப்புணர்வு, இது போன்ற பல சமூக சேவைகள் எல்லாம் செய்து சாதனை புரிந்ததற்காக இந்த மணிமேகலை விருது மற்றும் 3 லட்சம் காசோலை ஆகியவையும் இந்த குழுவிற்கு வழங்கப்பட்டது என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இது குறித்து மணிமேகலை விருது பெற்ற பெண்கள் பேசிய போது, ”இந்த விருதையும், தொகையையும் முதலமைச்சரிடம் இருந்து பெற்றோம். மகளிர் திட்டம் வழிகாட்டுதலின்படி இந்த விருது எங்களுக்கு கிடைத்துள்ளது.
மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. வழங்கப்பட்ட தொகையில் தையல் இயந்திரங்கள் மூலம் ஆடை தைத்து விற்பனை செய்ய சுய உதவிக் குழு பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
விருது பெற்ற பெண்கள் மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.