ஜெய் பீம் இயக்குநரின் அடுத்தப் படம் ரஜினிகாந்துடனா, சூர்யாவுடனா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் முடிவடைவதற்கு முன்பே, அவரது 170-வது படத்தைப் பற்றி நிறைய ஊகங்கள் எழுந்துள்ளன. லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதனுடன் தனது அடுத்தப் படத்திற்காக ரஜினி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது, ரஜினிகாந்த் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இணைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞானவேல் கூறிய கதை ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்துள்ளதாக இவர்களுக்கு நெருங்கிய சோர்ஸ் ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வட்டாரம் கூறுகையில், “ஞானவேலின் அடுத்த படமும் சமூக பிரச்சனைகளை பேசும். ரஜினிகாந்த் அந்த கதையை விரும்பினார். இருப்பினும், ஞானவேலை பவுண்டட் ஸ்கிரிப்டுடன் வருமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தை தனக்கு ஏற்றதாக மாற்றும் விதத்தில், சில மாற்றங்களையும் பரிந்துரைத்துள்ளார்.
தற்போது சிவாவுடன் தனது சூர்யா 42 படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா, தனக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதுமாறு இயக்குனர் ஞானவேலிடம் கேட்டுக் கொண்டதையும் அந்த சோர்ஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பகிர்ந்துள்ளது.
அனைத்தும் சரியாக நடந்தால் அவருக்கு தேதிகளை மொத்தமாக வழங்கவும் தயாராக இருக்கிறாராம் சூர்யா. ஆக, இந்த இரண்டு நடிகர்களில் யார் அடுத்ததாக ஞானவேலுடன் இணையப் போகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.