நடிகர் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் உடல்நிலை குறித்து தினமும் இணையத்தில் பரவி வரும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்த இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் இருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அண்மையில் அதிகாப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இசையமைப்பாளர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறையில் முத்திரை பதித்த விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார் விஜய் ஆண்டனி. ‘பிச்சைக்காரன்’ படம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மலேசியாவில் ’பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார் விஜய் ஆண்டனி. இதனால் அவர் படு காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் மலேசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ’பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார், அவரை இரண்டு வாரம் ஓய்வெடுக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் ரசிகர்களிடம் அவர் வீடியோ மூலம் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், விஜய் ஆண்ட னி பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.